அறிக்கைகள்

தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து திரு. ஆர்.என்.ரவியை நீக்குக!

சி.பி.ஐ. தேசியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் 2025 ஏப்ரல் 24, 25ல் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம், திரு. ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு ஒன்றிய அரசைக் கோருகிறது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியலமைப்புச் சட்டப் பதவியை வகிக்கும் ஆளுநர், மோதல்களின் உச்சத்தை எட்டியுள்ளதோடு, அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை அடிமட்டத்திற்குத் தகர்த்துள்ளார்.
தமிழக ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து, அவர் எப்போதும் மாநில அரசுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 10 மாநில சட்டமன்ற மசோதாக்களை நிறுத்தி வைத்தது “சட்டவிரோதமானது” மற்றும் “தவறானது” என்று ஏப்ரல் 8, 2025 அன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒருமனதாகத் தீர்ப்பளித்தது. இதன் மூலம், அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநரின் அதிகாரங்களை அமர்வு தெளிவுபடுத்தியது.

பிரிவு 142 இன் கீழ் உள்ள தனது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலுவையில் வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்று தீர்ப்பளித்தது.

இவற்றில், மாநில பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் எவ்வாறு நியமிக்கப்படவேண்டும் என்பதை வரையறுக்கும் மசோதாவும் உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டத்தை பாழ்படுத்தும் முயற்சியாக, திரு. ஆர்.என். ரவி 2025 ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் துணைவேந்தர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் அழைக்கப்பட்டுள்ளார். இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலும் அவமதிப்பதாகும்.

இந்துத்துவா சித்தாந்தத்தின் பிரச்சாரகராக, கல்லூரி கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்‘ என்று கோஷமிடுமாறு அவர் வலியுறுத்தியபோது முரண்பாடு புதிய உச்சங்களைத் தொட்டது.

அவரது செயல்களும் அறிக்கைகளும் எப்போதும் மாநில அரசாங்க செயல்பாட்டை விமர்சிப்பதாகவும், சீர்குலைக்கும் தன்மையுடனும் உள்ளன. உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்தியுள்ளபடி, ஆளுநர் ஒரு வினையூக்கியாக இருக்க வேண்டும், தடுப்பவராக இருக்கக்கூடாது.

ஆளுநர் ஒரு தடுப்பவராக மட்டுமல்ல, அவர் ஒரு தீவிர சீர்குலைப்பவராகவும் இருக்கிறார்.

ஆர்.என்.ரவி எப்போதும் ஆளுநர் பதவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவராக இருந்து வருகிறார். அவரது செயல்களும் அறிக்கைகளும் அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களை அவமதிப்பதாக இருக்கின்றன. அவரது சமீபத்திய நடவடிக்கைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். இதனால் திரு.ஆர்.என்.ரவி ஆளுநராகத் தொடர்வதற்கான அனைத்து சட்ட, அரசியலமைப்பு மற்றும் தார்மீகத் தகுதி அனைத்தையும் இழக்கிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம், திரு.ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button