குமரி அனந்தன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல்

குமரி அனந்தன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.குமரிஅனந்தன் (வயது 93) இன்று (09.04.2025) அதிகாலையில் சென்னையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் 1933 மார்ச் 19 ஆம் தேதி பிறந்த குமரி அனந்தன், அண்ணல் காந்தி மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டவர். காங்கிரஸ் பேரியக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்து செயல்பட்டவர். பெருந்தலைவர் காமராசரின் அணுக்கத் தொண்டராக வளர்ந்தவர். இதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்களவையில் பணியாற்றிவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செயல்பட்ட குமரி அனந்தன், அதன் அரசியல் முடிவுகளில் மாறுபட்டு காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவியவர். இதன் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு 19 ஆண்டுகள் செயல்பட்டவர். பிறகு காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைத்து, இறுதி வரை காங்கிரஸ் தொண்டராக செயல்பட்டவர்.
பனைத் தொழிலாளர் வாரியத் தலைவர் பொறுப்பில் இருந்து, பனையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் பட்டவர். தலைசிறந்த பேச்சாளர். “இலக்கிய செல்வர்” என்ற சிறப்பு பெற்று விளங்கியவர். நதிகள் இணைப்பு, மதுவிலக்கு, தமிழ் மொழி வளர்ச்சி கொள்கைகளில் வாழ்நாள் முழுவதும் தளர்வில்லாமல் போராடி வந்தவர். சாதி, மதவெறி, வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக சமரசம் காணாது போராடி வந்த ஜனநாயகவாதி.
மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது பல முறை நடைபயண இயக்கத்தை (பாத யாத்திரை) மேற்கொண்டு, மக்கள் கவனத்தை ஈர்த்து, அரசின் கொள்கை முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியவர். மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனின் பொது வாழ்வுக்கு பாராட்டு தெரிவித்து தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு (2024) தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுப்பற்றும், மக்கள் நலனும் இருகண்களாக கொண்டு வாழ்ந்த, அப்பழுக்கற்ற தேச பக்தரை நாடு இழந்து விட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.