இந்தியா

ஜனவரி 26 – குடியரசு தினத்தை அரசியலமைப்பு தினமாகக் கடைபிடிப்போம்!

2023 ஜனவரி 26 ஆம் நாளை அரசியலமைப்பு தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா அறைகூவல் விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டாக்டர் அம்பேத்கரைத் தலைமைச் சிற்பியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பானது, இந்திய அரசை ஒரு மதச்சார்பற்ற, கூட்டாட்சி முறையிலான, மக்கள்நல அரசாகவே வரையறுக்கிறது. மதத்தின் அடிப்படையிலான ஒரு அரசை நிறுவிட, பிரிவினைவாத, மதவெறிபிடித்த பாசிச செயல்திட்டத்தைப் பின்பற்றி வரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அணி, இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான அம்சங்களை எல்லாம் தகர்த்தெறிந்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அரசியலமைப்பைப் பாதுகாத்திட, நமது கட்சி அணிகள் மக்களை அணுகி, மக்களிடம் ஒன்றுபட்டு, அவர்களை அணிதிரட்டி, அரசியல்படுத்த வேண்டும். 2023 ஜனவரி 26 அன்று நமது கட்சி அலுவலகங்களிலும், வாய்ப்புள்ள இதர இடங்களிலும், நமது கட்சி அணிகள் தேசியக் கொடியை ஏற்றிட வேண்டும். விடுதலைப் போராட்டத்திலும், இந்தியக் குடியரசை உருவமைப்பதிலும் நமது கட்சி ஆற்றிய மகத்தான பாத்திரத்தை எடுத்துரைக்கும் வண்ணம் பலவகை நிகழ்ச்சிகளை நமது கட்சி அணிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். அரசியலமைப்பின் முகவுரையை வாசித்து, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியையும் கட்சி அணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button