தமிழகம்

மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த, கடலூர் மாணவி ஸ்ரீமதி, சூலை 13ஆம் தேதி மரணம் அடைந்தார். மாணவியின் சாவு தொடர்பாக அவரது பெற்றோர்கள் எழுப்பிய ஆழமான சந்தேகங்களைப் பள்ளி நிர்வாகமோ, அரசுத் தரப்போ இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஸ்ரீமதி சந்தேக மரணத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து, உண்மைக் குற்றவாளிகளைச் சமுகத்திற்கு அடையாளம் காட்டுவதும், குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவதும் அரசின் சட்டப்பூர்வ கடமை, பொறுப்பாகும். ஆனால், மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக விசாரணை அமைப்புகள் சரியான திசைவழியில் செயல்படுகிறதா என்ற கேள்வி பொது மக்களிடம் வலுவாக எழுப்பப்படுகிறது.

பள்ளி நிர்வாகிகள், உச்ச நிலை அதிகார மையத்தில் அழுத்தம் தரும் செல்வாக்குமிக்கவர்கள் என்பதால், விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவி உயிரிழப்பை தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளி நிர்வாகம் காட்டிய அலட்சியத்தாலும், அதிகார வர்க்கம் போக்குக் காட்டி காலம் தாழ்த்தி வந்ததுமே, அமைதி காத்து வந்த மக்களை ஆத்திரமூட்டியுள்ளது. இதன் விளைவாக, மக்களின் நேரடி நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. இதனையொட்டி, முன்னூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதில் ஏராளமான இளைஞர்களின் கல்வி வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தி, அவர்களது எதிர்காலம் நாசப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நிர்பந்தம் காரணமாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், வழிகாட்டு நெறிகளையும் கருத்தில் கொள்ளாது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிணையில் விடுதலை அளிக்கும் போது, விசாரணை குற்றவாளிகள் நிரபராதிகள் என நற்சான்று வழங்கும் கருத்துக்களை வெளியிட்டிருப்பது நீதி பரிபாலன முறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கும் செயலாகும்.

உடற்கூறாய்வு அறிக்கைகள் உள்பட ஸ்ரீமதி மரணத்தில் ஏராளமான மர்ம முடிச்சுக்கள் விழுந்திருப்பதை வெளிப்படுத்தி வருகின்றது. இந்தச் சூழலில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும், சட்ட அத்துமீறல் நடவடிக்கைகளும் உருவாக்கியுள்ள சந்தேக நிழல் தமிழ்நாடு அரசின் மீது விழுந்து விடாமல், ஸ்ரீமதியின் மர்ம மரண வழக்கை எச்சரிக்கையோடும், வெளிப்படையாகவும், நீதி நிலைநாட்டப்படும் வகையிலும் அணுக வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button